Header Ads

Header Ads

மாதவிடாய் வலி குறைக்க எளிய வழிமுறைகள்


 எனக்கு மாதம்தோறும் மாதவிடாய் வரும்போது மிகவும் வலிக்கிறது. அது இயல்புதான் என்று பலரும் சொல்கிறார்கள். ஆனால், என்னால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நமது பாரம்பரியத்தில் இதற்கு மருந்து இருந்திருக்கும். இதற்கு ஆயுர்வேதத் தீர்வு என்ன? - கவிதா, போடிநாயக்கனூர்

மாதவிடாய் வரும்போது வரும் வலிக்கு Dysmenorrhoea என்று பெயர். இதனால் அன்றாட வாழ்வின் செயல்கள் பாதிக்கப்படும். அது தசைப்பிடிப்பு போல இருக்கும். கர்ப்பப்பை சுருங்கி விரிவதால் வலி அதிகமாக இருக்கும்.

சில நேரங்களில் குத்துவது போலவும், மந்தமாகவும், வாந்தி எடுக்கும் தன்மையுடையதாகவும், எரிச்சலாகவும், அழுத்தத்துடனும் காணப்படும்.

மாதவிடாய் குறையக் குறைய வலியும் குறையும். சில நேரங்களில் அதிக ரத்தப்போக்கு காணப்படும். இதை Menorrhagia என்று சொல்வார்கள். மாதவிடாய் காலத்தில், வேறொரு நோயால் வலி வந்தால் அதை Secondary Menorrhagia என்கிறார்கள்.

அறிகுறிகள்

அடி வயிற்றிலேயே, தொப்புளுக்குக் கீழே வலி காணப்படும். இந்த வலி காலுக்கும், முதுகுக்கும் பரவலாம். சில பெண்கள் வாந்தி எடுக்கும் உணர்வையும், வயிற்றுப்போக்கையும், தலைசுற்றலையும், மயக்க நிலையையும் உணர்வார்கள். மயங்கி விழுந்த பெண்களும் உண்டு. ஒலி, சப்தம், மனம் போன்றவற்றால் இவர்களுடைய உடல்நிலையில் மாறுபாடு ஏற்படும்.

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வாலும், சினைமுட்டை உருவாகும் நிலையிலும் இது ஏற்படுகிறது. Endometriosis என்னும் நோயில் இது காணப்படும்.

இதைச் சரியாகக் கண்டறிய வேண்டும். கர்ப்பப்பை கட்டிகளிலும், சினைமுட்டை கட்டிகளிலும் இது வரலாம். நோயாளி கூறும் நோய் வரலாற்றை வைத்தே சாதாரண மாதவிடாய் வலியை வேறுபடுத்த முடியும். ஆயுர்வேதத்தில் அபான வாயுவின் தடையால் இந்த வலி வருகிறது என்று கூறுகிறார்கள். இதை உதாவர்த்த யோனி என்று சொல்கிறார்கள்.

இதற்கு:

o  தான்வந்தர தைலத்தைத் தொப்புளுக்கு அடியில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம்.

o  சப்தஸாரம் கஷாயத்தில் ஹிங்குவச்சாதி குளிகையைச் சேர்த்துக் கொடுக்கலாம்

o  குமாரியாஸவம் 25 மி.லி. உணவுக்குப் பின் இரண்டு வேளை கொடுக்கலாம்.

o  ஜீரக லேகியம் 1 ஸ்பூன் உணவுக்குப் பின் தினசரி இரண்டு வேளை சாப்பிடுவது சிறந்தது.

இதல்லாமல் சில கைமருந்துகளும் உள்ளன.

o  முருங்கை ஈர்க்கு 2 கைப்பிடி அளவு எடுத்துத் தண்ணீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி, அதனுடன் வெங்காயம், சீரகம், மிளகு, நெய் கூட்டித் தேவையான உப்பும் சேர்த்து, சூப் செய்து பருகிவரலாம், வயிற்றுவலி குறையும்.

o  முள்ளு முருங்கை இலையையும் கல்யாண முருங்கை இலையையும் மிக்சியில் போட்டு லேசாகத் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுவலி குறையும்.

o  முருங்கைக் கீரையுடன் சிறிது கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாக்கி ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டால், வலி குறையும்.

o  உலர்ந்த புதினா இலையுடன் ஒரு ஸ்பூன் கறுப்பு எள் சேர்த்துக் கஷாயமாகச் செய்து சாப்பிட்டால், வலி குணமாகும்.

o  கொத்தமல்லி சாறில் கருஞ்சீரகத்தை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, தினமும் ஒரு கிராம் அளவுக்குத் தேனில் குழைத்துச் சாப்பிட்டால் வலி குறையும்.

o  மாதவிலக்கு வந்த மூன்றாம் நாள் காலை மலைவேம்பு சாறு 1/2 கப் குடிக்கவும்.

o  சாதிக்காய், திப்பிலி, சீரகம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

o  ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடித்து, 1/4 ஸ்பூன் மோரில் கலந்து சாப்பிடப் பலன் கிடைக்கும்.

o  எள் விதையை அரைத்துக் கொட்டைப் பாக்கு அளவு எடுத்து நீரில் கலந்து சாப்பிடவும்.

o  ஒரு ஸ்பூன் இஞ்சிச் சாறுடன், சிறிது பெருங்காயம் சேர்த்து மோரில் கலந்து சாப்பிட, வலி குறையும்.

சேர்க்க வேண்டியவை: வாழைப் பழம், அன்னாசிப் பழம், பப்பாளிப் பழம், பசலைக் கீரை, ஓட்ஸ், கோதுமை, கொட்டை வகைகள்.

தவிர்க்க வேண்டியவை:

மாமிசம், பால், பாலாடைக்கட்டி, பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள், எண்ணெய் பயமுறுத்தும் நோய் பெண்களைப் பாடாய்ப் படுத்துகிற வேறொரு நோயும் உண்டு. இதற்கு Endometriosis என்று பெயர்.

சில நேரங்களில் யோனித் திசுவானது கர்ப்பப்பையைவிட்டு, பிற பகுதிகளில் போய்ப் படிந்து விடுகிறது. ஹார்மோன்களே இதற்குக் காரணம். இது வலியையும், மகப்பேறு இன்மையையும் ஏற்படுத்துகிறது.

இதற்கு இந்திய மருத்துவத்தில் தலைசிறந்த சிகிச்சைகள் உள்ளன. முதலில் இந்த நிலையை ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். இந்த நோயாளிகள் கடுமையான இடுப்பு வலியால் அவதிப்படுவார்கள். சிலருக்கு லேசாகவும், சிலருக்குக் கடுமையாகவும் வலி இருக்கலாம்.

வலி அறிகுறிகள்

இரண்டு பக்கங்களிலும், முதுகு, கால், இடுப்பு, ஆசனவாய் ஆகிய இடங்களில் வலி வரும். சிலருக்கு வலி இல்லாமலும் இருக்கலாம். உடலுறவில் ஈடுபடும்போது வலி இருக்கும், வேகமாக மூத்திரம் போதல் காணப்படலாம். இவற்றுக்கெல்லாம் பல நிலைகள் உள்ளன.

கர்ப்பப்பை, சினைமுட்டை, மலப் பகுதி, மூத்திரப் பகுதி போன்றவற்றில் வலி ஏற்படும். கசிவும் ஏற்படலாம். இவற்றை வாதஹரமாகவும், ரக்த பிரஸாதனமாகவும் உள்ள வஸ்தி சிகிச்சை செய்து குணப்படுத்தலாம்.

No comments: